மகனை என்னிடமிருந்து பிரித்துவிட்டார் ஜெ: தாமரைக்கனி புகார்
சென்னை:
எனது மகனை என்னிடமிருந்து பிரித்த ஜெயலலிதாவின் தலைமையை கருணாநிதி மீது சத்தியமாக இனிமேல் ஏற்க மாட்டேன் என்று சபதம் செய்துஇருக்கிறார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ. தாமரைக்கனி.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாமரைக்கனி. இவரை எதிர்த்து இவரது மகனை அதிமுக சார்பில்நிறுத்த ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எம்.எல்.ஏ. சீட்டுக்காக மகனும் தந்தை விட்டுப் பிரிந்துவிட்டதாகத் தெரிகிறது.
தந்தையை எதிர்த்துப் போட்டியிடவும் அவர் தயாராகி வருகிறார்.
கட்சியை விட சொந்த செல்வாக்கால் தனித்து நின்றே ஜெயிக்கக் கூடிய பலம் வாயந்த தாமரைக்கனி கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுவென்றவர்.
அதன்பிறகு அதிமுகவில் இணைந்து அதிமுகவின் சட்டமன்ற தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
இந்நிலையில் சென்னையில் புதன்கிழமை அறிக்கை ஒன்றை தாமரைக்கனி வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
நடராஜன் - சசிகலா, ராமராஜன்-நளினி ஜோடிகளை பிரித்தது போல என்னிடம் இருந்து என் மகனை பிரித்து விட்டார் ஜெயலலிதா.
அதிமுக சார்பில் போட்டியிட 25 லட்ச ரூபாய் என்னால் தரமுடியாது. எனது மக்கள் செல்வாக்கை பயன்படுத்தியே போட்டியிடுவேன் என கூறினேன்.
அதனால், என் மகனை எனக்கு எதிராக நிறுத்துகிறார் ஜெயலலிதா. என் மகனிடம் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவனுடையமாமனார் மூலம் 25 லட்ச ரூபாய் பெற்று உள்ளார்.
தென்மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்ற ஜெயலலிதாவின் நம்பிக்கை இம்முறை பொய்த்துவிடும். ஜாதிகளுக்குப் பின்தான் கட்சிகளை பற்றிமக்கள் நினைக்கிறார்கள்.
இதனை மறந்து விட்ட ஜெயலலிதாவிற்கு, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை, தூத்துகுடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கிடைக்காது.
இனி எக்காலத்திலும் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்க மாட்டேன். இது என் தாய் மீது ஆணை. தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது ஆணை.
தமிழகத்தை ஆளும் தகுதி எம்.ஜி.ஆரின் 40 ஆண்டு கால நண்பரான கருணாநிதிக்கே உண்டு. மீண்டும் அவர் தான் முதல்வராக வர வேண்டும். வருவார் எனதாமரைக்கனி தனத அறிக்கையில் கூறியுள்ளார்.