தேர்தல் ஸ்பெஷல்: தமிழ் கற்கும் வெங்கைய்யா நாயுடு
டெல்லி:
தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. மந்திரிகளுக்கு புதுவேஷம் போட்டு களத்தில் இறக்கி உள்ளது பா.ஜ.க. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 3மாநிலங்களுக்கு தலா ஒரு மந்திரியை தேர்தல் பிரச்சாரம் செய்ய நியமித்து உள்ளது பா.ஜ.க.
பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மத்திய மந்திரியை நியமித்து அம்மாநில மொழியில் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதனால்,சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்தின் மொழியை கற்று வருகின்றனர்.
தலைவர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசுவதை உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்க லோக்கல் தலைவர் ஒருவர் இருந்தது எல்லாம் அந்த காலம்.
தற்போது உள்ளூர் நாகரீகத்திற்கு ஏற்ப உடையணிந்து உள்ளூர் மொழியில் பேசி பிரச்சாரம் செய்வது பா.ஜ.க.வின் புதிய பாணி.
கடந்த லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ்.அப்போது, அவர் கன்னட மொழியில் பேசி உள்ளூர் மக்களிடம் கைதட்டலை பெற்றார். ஓட்டு தான் கிடைக்கவில்லை.
அது போல் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நியமிக்கப்பட்டு உள்ள வெங்கைய்யா நாயுடு தமிழில் பேச பயிற்சி பெற்று வருகிறார். தமிழக அரசியல்பற்றி அக்குவேறு ஆணிவேராக அறிந்தவர் நாயுடு. எனவே, அவரை தமிழ்நாட்டிற்கு நியமித்துள்ளது பா.ஜ.க.
மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இருந்த உறவு முறிந்துவிட்ட நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் ஜோதிபாசுவை எதிர்த்து பெங்காலி மொழியில்பிரச்சாரம் செய்ய சுஷ்மா தயாராகி வருகிறார்.
மேற்கு வங்காளத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம் செய்வதில் வல்லவர்கள். ஆங்காங்கே தெரு நாடகங்கள் அரங்கேற்றி காங்கிரஸ்கட்சியின் மானத்தை வாங்குவதோடு பா.ஜ.கவையும் வம்புக்கு இழுக்கின்றனர். அதற்கு ஈடுகொடுக்க சுஷ்மாவை தயார்படுத்தி வருகிறது பா.ஜ.க.
மற்றொரு மத்திய அமைச்சரான அனந்தகுமார், மலையாள மொழியில் பயிற்சி பெற்று வருகிறார். மத்திய கலாசாரத்துறை அமைச்சரான அனந்தகுமார் மலையாள மொழியோடு, தனது துறையின் சேவையை பயன்படுத்தி கேரள கலாசாரத்தை கற்றுக் கொண்டால் கேரளத்தில் தூள் கிளப்பலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.