தமிழகத்தில் கடும் மின்தடை ஏற்படும்?
கடலூர்:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைதோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இதனால், தமிழகத்தில் தொடர்ந்து மின்தடை நிலவும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த மே 17ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் விதிப்படி வேலை நிறுத்தத்தைத் துவக்கினர். இதனால் பழுப்புநிலக்கரி உற்பத்தியும் மின் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை 1000 மெகா வாட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி இருந்தது. ஊதியப் பிரச்சினைதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை போராட்டம் தீவிரமடையும் என்றும், அன்று நள்ளிரவு முதல் காலவரையற்றவேலை நிறுத்தம் துவங்கும் என்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்தடை நிலவும் என்று அஞ்சப்படுகிறது.