குஜராத்தில் புயல்: நாளை கரையை கடக்கிறது
காந்திநகர்:
அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் வழியே சனிக்கிழமைமாலை கரையைக் கடக்கிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் ஆர்.கே.கன்கானே கூறுகையில், மணிக்கு 5 முதல் 7கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் வழியே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் எந்தப் பகுதி வழியே புயல் கரையைக் கடக்கும் என்பது வெள்ளிக்கிழமை மாலைக்குள்தெரிவிக்கப்படும். குஜராத் மாநிலம் வழியே புயல் கரையைக் கடப்பதால் போர்பந்தர், வேராவல் மற்றும் சூரத்ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று தெரிகிறது.
புயல் குஜராத் மாநிலம் வழியே கரையைக் கடப்பதால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கும் விதத்தில் மாநில அரசுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
ராணுவம் மற்றும் விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாகசி.ஆர்.பி.எப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சூரத், பரூச் மற்றும் அலாங் பகுதிகளில் புயலால் பாதிப்பு ஏற்படும் என இனம் கண்டறியப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடற்கரைப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.