சென்னைக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திரா சம்மதம்
சென்னை:
சென்னைக்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்திருந்தவேண்டுகோளை ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஏற்றுக் கொண்டுள்ளார்.
சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஈரோட்டிலிருந்து ரயில் மூலமும்,நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரிலிருந்து ரயில் மூலம் நீர் கொண்டு வரவும் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி நீரை கொண்டு வரும் ஏற்பாடுகளில் ஜெயலலிதா இறங்கினார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சமீபத்தில் தொலைபேசியில் பேசினர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை தமிழக தலைமை செயலாளர் சங்கர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைசெயலாளர் சாந்தா ஷீலா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாகஇயக்குநர் நிரஞ்சன் மார்டி மற்றும் உயர் அதிகாரிகள் ஹைதராபாத் சென்றனர்.
அங்கு அவர்கள் ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை நகரில் உள்ள கடுமையான குடிநீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 190 கனஅடி தண்ணீரை திறந்து விட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.
எந்தெந்த நேரத்தில், எந்தெந்த தேதியில் தண்ணீர் திறந்து விடுவது என்பதை இரு மாநில தொழில்நுட்ப அலுவலர்களும் முடிவுசெய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications