ஸ்டாலினும் கைது: மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்
சென்னை:
பெங்களூர் சென்று கொண்டிருந்த ஸ்டாலின், கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து அவசரமாக சென்னை திரும்பினார்.
உடனடியாக தனது வீட்டுக்குச் சென்று நடந்தவை குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் சென்னை டைலர் சாலையில் உள்ள முதன்மைகூடுதல் செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரை 14ம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறுகையில்,
வெள்ளிக்கிழமை எனது மைத்துனரைப் பார்ப்பதற்காக காரில் பெங்களூர் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது நள்ளிரவில் திடீரென்று என் அப்பா கைது செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. என்னைப் போலீஸார் தேடிக்கொண்டிருந்ததாகவும் தகவல் கிடைத்தது. உடனடியாக சென்னை திரும்பினேன்.
சென்னை நகரில் 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஊழல் நடந்ததாக என் அப்பாவைக் கைது செய்துள்ளனர்.
கோபாலபுரத்திலும், ஆலிவர் ரோட்டிலும் உள்ள எங்கள் வீடுகளில் போலீஸார் சோதனை செய்தனர். வீட்டிலுள்ள பெண்கள்மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தினர் போலீஸார். கையைப் பிடித்து இழுத்துள்ளனர்.
பெண்களை மானப்பங்கப்படுத்தும் அளவுக்கு மிகக் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறனர். வீட்டுக்குள் புகுந்து இதுபோன்றகீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்ட யாரையும் நான் விடப்போவதில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்.
சட்டமன்றத்திலேயே மரபுகளை மீறி என் மீது புகார் கூறியவர் முதல்வர் ஜெயலலிதா. அப்போதே என் மேல் கூறப்படும் எந்தவழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன் நான்.
மூட்டுவலி, நெஞ்சுவலி என்று ஓடி ஒளிந்து கொள்ளும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல நாங்கள்.
வெளிநாட்டில் ஹோட்டல் கட்டி ஊழல் செய்தவர்கள் அல்ல நாங்கள். பிளசன்ட் டே ஊழல், டான்சி ஊழல் என்ற பல ஊழல்புரிந்தவர்கள் அல்ல நாங்கள்.
நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். என் அப்பாவை வாரன்ட் இல்லாமல் கைதுசெய்துள்ளனர். கிரிமினல் வழக்குக்கு வாரன்ட் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
என்னைப் போலீஸார் தேடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் என்னைத் தேட வேண்டாம். நானே சரணடைகிறேன்என்றார் ஸ்டாலின்.
பின்னர் தன்னிடம் சரணடைந்த ஸ்டாலினை ஜூலை 14 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அசோக்குமார்உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸார் ஸ்டாலினைக் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications