அறிக்கை தர தமிழக கவர்னருக்கு வாஜ்பாய் கெடு
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்து முழு அறிக்கை தர தமிழக கவர்னருக்கு, பிரதமர் வாஜ்பாய் கெடு விதித்துள்ளார்.
கருணாநிதி கைதான சம்பவத்தில் ஆளுநர் பாத்திமா பீவியின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அதிருப்தியைக்கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரது ஆலிவர் இல்ல வீட்டில் வைத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முரட்டுத்தனமாக போலீஸாரால்கைது செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் மாநிலஆளுநர் பாத்திமா பீவி சரியாக நடந்து கொள்ளவில்லை என்று மத்திய அரசு கருதுகிறது.
ஒரு மாநிலத்தில் ஏதாவது குறிப்பிடத்தக்க அளவிலான பெரிய சம்பவம் நடந்தால் அதுகுறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் தெரிவிக்கவேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால் கருணாநிதி போன்ற ஒரு பெரிய அரசியல் தலைவர் முரட்டுத்தனமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து மத்தியஅரசுக்கு அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் மத்திய அரசு அதிருப்தியுடன் உள்ளதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணனும் கூட இதுதொடர்பாக அதிருப்தியடைந்துள்ளார். எனவேதான் பாத்திமா பீவிக்கு அவரே போன் செய்து என்னநடந்தது என்று கேட்டுள்ளார்.
இதன் காரணமாக ஆளுநர் பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள் கருணாநிதி கைது சம்பவம் குறித்து அறிக்கை தருமாறு ஆளுநர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
அவரது அறிக்கையைப் பெற்ற பின் மத்திய அமைச்சரவை கூடி அதுகுறித்து விவாதிக்கவுள்ளது. அப்போது எடுக்கப்படும் முடிவைப்பொறுத்தே ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்யப்படுவாரா அல்லது ஆளுநர் பாத்திமா பீவி மாற்றப்படுவாரா என்பது குறித்துத் தெரிய வரும்.