அதிமுக பணிந்தது: மாறன், பாலு விரைவில் விடுதலை
டெல்லி:
மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள், கைது செய்யப்பட்டுள்ள 2 மத்திய அமைச்சர்கள்விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜேட்லியிடம் உறுதியளித்துள்ளனர்.
இதுகுறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் முடிவடைந்து, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும்விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி ஊழல் குற்றச்சாட்டு காரணமாகக் கைது செய்யப்பட்டார்.அப்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருணாநிதியைத் தவிர, 2 மத்திய அமைச்சர்களும் கைது செய்யப்பட்டது மத்திய அரசின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது.
இந்நிலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் டெல்லி சென்று, மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தனர்.
அப்போது, கைது செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களை விடுவிக்க தேவையான அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும்எடுப்பதாக அ.தி.மு.க. அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
அவர்கள் ஜனாதிபதியையும் சந்தித்து, தமிழக அரசின் நிலைப்பாடு பற்றித் தெரிவிக்க உள்ளனர். ஜனாதிபதியைச் சந்திக்கப்போகும்போது, அ.தி.மு.கவைச் சேர்ந்த எம்.பிக்களும் இவர்களுடன் செல்கின்றனர். இவர்களை ஜனாதிபதி திங்கள்கிழமை மாலைசந்திக்கப் போகிறார்.
இந்நிலையில், கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, தமிழகத்தில் நேரடி ஆய்வை மேற்கொண்ட ஜார்ஜ்பெர்னாண்டஸ் தலைமையிலான மூவர் குழு, அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதிஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.