தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு, அடித்து இழுத்துச் சென்ற சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து திமுகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பையொட்டி தமிழகத்திலும்பாண்டிச்சேரியிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை உள்பட முக்கிய நகரங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர வேறு கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
தனியார் அலுவலகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் ஆங்காங்கே ஓடும் ஒரு சில பஸ்களிலும் மக்கள்கூட்டம் சொற்ப அளவே இருந்தது.
அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், மிகக்குறைவான ஊழியர்களே வேலைக்கு வந்திருந்தனர்.
சென்னையில்..
சென்னையில் முழு அடைப்புக்கு முழு ஆதரவு இருந்தது. இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் சாலையில் மறியல் செய்ய முயன்ற திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பூக்கடை, பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும்பல இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட பாஜகவினர் பலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பனகல் பூங்கா அருகே சாலை மறியல் செய்ய முயன்ற தமிழக பாஜக தலைவர் கிருபாநிதி உள்பட பல பாஜகவினர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அங்குள்ள கல்யாண மண்டபம் அருகே பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தியாகராயநகர், பாண்டி பஜார் உள்பட பல இடங்களில் 500 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைபிடிக்கப்படும் இந்த பந்துக்கு மாநிலம் முழுவதும் ஆதரவு உள்ளது.
பிற ஊர்களில்..
புதுக்கோட்டையில் ஒரு அரசு பஸ்சுக்குத் தீ வைக்கப்பட்டது. ஆலங்குடியில் 11 கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டன.இப்பகுதிகளில் ஆங்காங்கே பஸ்களுக்குக் கல்வீச்சு மற்றும் கடைகளுக்குத் தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.
திருவண்ணாமலையில் சாலை மறியல் செய்ய முயன்ற 1,800 க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கத்தில் முழு அடைப்பையொட்டி பதட்டம் நிலவுகிறது. முக்கிய சாலைகளில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காதவகையில், போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பந்த் மிகவும் அமைதியாகக் கடைபிடிக்கப்படுகிறது. சாலை மறியல் செய்ய முயன்ற 60பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய ஊர்களில் ரயில்நிலையங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எட்டையபுரத்தில் பஸ்கள் மீது கல்வீச்சுச்சம்பவங்கள் நடந்துள்ளன.
ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய ஊர்களில் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாக்குமரியில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாத காரணத்தால்சாலைகள் மயானம் போல் காட்சியளித்தன.
புதுவையில்..
கருணாநிதி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக பாண்டிச்சேரியிலும் முழு அடைப்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
கடலூர் அருகே வடலூரில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர்தர்ணாவில் ஈடுபட்டார். பன்னீர்செல்வம் உள்பட 72 பேரைப் போலீஸார் கைது செய்தனர். கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.பாண்டிச்சேரியில் முழு அடைப்புக்கு முழுமையான ஆதரவு இருந்தது.
கருணாநிதி கைதை எதிர்த்து, பாண்டிச்சேரியில் கடந்த சனிக்கிழமையும், ஜானகிராமன் தலைமையிலான திமுக முழு அடைப்புக்குஅழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.