விடுதலைப் புலிகளின் படகுகள் குண்டு வீசி தகர்ப்பு
கொழும்பு:
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் 8 படகுகள் புதன்கிழமை காலை குண்டு வீசிதகர்க்கப்பட்டன.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணரத்னே கூறும்போது:
முல்லைதீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் படகுகள் நடமாட்டத்தை இலங்கைக் கடற்படையின் ரோந்துபடையினர் கண்டு பிடித்தனர். இவ்விஷயம் உடனே விமானப்படைக்கு தெரிவிக்கப்பட்டது.
விரைந்து பறந்த விமானப்படையின் போர் விமானங்கள், இந்த படகுகளின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின.இந்தக் குண்டுவீச்சில், அனைத்து 8 படகுகளும் உருத்தெரியாமல் அழிந்து போயின.
இறந்தவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்துவிவரம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகமான உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவான கடற்புலிகள், இந்த படகுகளில் அதிக அளவிலான ஆயுதங்களை எடுத்துச்சென்றிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றார் கருணரத்னே.
விடுதலைப் புலிகள், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைத்தீவு கடல் பகுதி வழியாக சிறு படகுகளை அனுப்பிதங்களுக்கு தேவையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றைக் கடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.