தங்களைத் தாக்கிய விமானங்களைத் தாக்கிய புலிகள்
கொழும்பு:
தங்கள் மீது குண்டுகளை வீச இலங்கை ராணுவம் பயன்படுத்தி வந்த கிபிர் ரக விமானங்களைத் தான் விடுதலைப் புலிகள் முதலில் தாக்கி அழித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்த புலிகளின் தற்கொலைப் படை முதலில் தாக்கியது இந்த கிபிர் விமானங்களைத் தான்.
இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் ராணுவத்தால் நேரடியாக புலிகளை எதிர் கொள்ள முடியவில்லை என்பதால் இந்தப் பகுதிகளில் விமானங்கள் மூலம் தான் தாக்குதல் நடத்தி வருகிறது அரசு.
இந்த விமானங்கள் விடுதலைப் புலிகளின் பதுங்கு அறைகள், குழிகள் மீது குண்டு வீசித் தாக்குவது வழக்கம். சில நேரங்களில் அப்பாவித் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இந்த விமானங்கள் குண்டுவீசிவிட்டுச் செல்வதுண்டு. பல அப்பாவித் தமிழர்களும் இந்தத் தாக்குதல்களில் இறந்துள்ளனர்.
சொன்னது போலவே தங்கள் பகுதிகள் மீது தாக்கிய கிபிர் விமானங்களைத் தான் புலிகள் முதலில் தாக்கி அழித்துள்ளனர்.
இஸ்ரேலிடம் வாங்கிய விமானங்கள்:
கடந்த ஆண்டில் புலிகளின் தாக்குதல் மிக பயங்கரமான நிலையை அடைந்தபோது தான் இந்த கிபிர் ரக குண்டு வீச்சு விமானங்களை இஸ்ரேலிடமிருந்து இலங்கை வாங்கியது. இந்த விமானங்கள் வாங்குவதற்காக கூடுதல் வரிகளையும் அரசு போட்டது.
இப்போது இந்த விமானங்களில மூன்றை புலிகள் தாக்கி அழித்துள்ளனர்.
அதே போல இலங்கையின் முக்கிய வருவாயே சுற்றுலா மூலம் தான் வருகிறது. இதற்காக 12 போயிங் விமானங்களை உலகம் முழுக்க இயக்கி வருகிறது இலங்கை. இப்போது இதில் 5 போயிங் விமானங்களை புலிகள் சேதப்படுத்தியிருப்பதாலும் ஒரே சர்வதேச விமான நியைத்தைத் தாக்கியிருப்பதாலும் விமானத் துறைக்கும் சுற்றுலா வருவாய்க்கும் பெரும் அடி விழுந்துள்ளது.
தென் இலங்கை அமைதியாகவே இருந்து வந்ததால் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர். இப்போது கொழும்பிலேயே புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் வரவும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனால் தான் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் விமான நிலையத்தைத் திறந்துவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. நாளையே விமான நிலையம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் எனவும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications