கொழும்பு விமான நிலையம் காலவரையறையின்றி மூடல்
கொழும்பு:
கொழும்பு விமான நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச்சேர்ந்த 10 பேரில் 9 பேர் ராணுவத்துடனான சண்டையில் கொல்லப்பட்டதையடுத்து விமான நிலையம் ஒருவழியாய் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
அதிகாலை 4 மணிக்கு விமானப் படைத் தளத்தின் பாதுகாப்பை மீறி விடுதலைப் புலிகள் துப்பாக்கிகள், மார்ட்டர்குண்டுகளை வீசும் ஆயுதங்கள், வெடி பொருள்களுடன் விமானப் படை தளத்துக்குள் நுழைந்தனர்.
ராணுவம் மற்றும் போலீசாரால் மிகத் தீவிரமாகப் பாதுகாக்கப்படும் பகுதிகளில் ஒன்று இந்த விமானப் படைத்தளம். ஆனால், அதையும் மீறி புலிகள் உள்ளே நுழைந்தது அதிபர் உள்பட அனைவரையும் அதிரச் செய்துள்ளது.
விமானப் படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு வீச்சு விமானங்கள், பயிற்சி விமானங்கள்,ஹெலிகாப்டர்களை குண்டு வைத்துத் தகர்த்த புலிகள் அடுத்து அருகாமையில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்குள் ஊடுருவி அங்கு நின்றிருந்த 3 போயிங் விமானங்களை சேதப்படுத்தினர்.
உடனடியாக விமான நிலையத்தை சூழ்ந்து கொண்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் உள்ளே சிக்கியிருந்தபுலிகள் மீது குண்டுமழை பொழிந்தனர்.
புலிகளும் வெகுநேரம் தாக்குப் பிடித்தனர். சுமார் 5 மணி நேரம் இரு தரப்பிலும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இறுதியில் 9 புலிகள் கொல்லப்பட்டனர். புலிகள் தாக்கியதில் 3 விமானப் படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்போது அங்கு துப்பாக்கிச் சூடு நின்றுவிட்டது. ஆனால், விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை சீரமைக்கவே பல நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.
புலிகளின் தாக்குதலில் மொத்தம் 11 விமானங்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில்நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூலை மாதத்தில் தான் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது. ஒரே நாளில்3,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதை நினைவு கூறும் வகையில் தான் புலிகள் இந்தத் தாக்குதலைநடத்தியுள்ளனர்.