அச்சத்தில் எம்.பிக்கள்
டெல்லி:
பட்டப் பகலில் எம்.பிக்கள் குடியிருப்புப் பகுதியில் கடும் பாதுகாப்பையும் மீறி பூலன்தேவி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அனைத்துக் கட்சிஎம்.பிக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடன் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாவலர் இருந்த நிலையில் இந்தக் கொலை நடந்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் ஓட்டைகள் உள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதை மத்திய அரசு மிகக் கடுமையானவிஷயமாக எடுத்துக் கொண்டுள்ளது.
டெல்லி நகர் முழுவதுமேரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
எம்.பிக்கள் அச்சம்:
மாஜி அரசியல் தலைவர்களுக்கும், எம்.பிக்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு சிறப்புப் பாதுகாப்புகளை வழங்கியிருந்தது உள்துறை அமைச்சகம்.இதனால், கோடிக்கணக்கான அரசுப் பணம் வீணாகியது.
அதே போல பல எம்.பிக்களுக்கு மாநில அரசுகளும் பாதுகாப்பு வழங்கியிருந்தன. தேவையில்லாத பாதுகாப்புகளை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுஅறிவுருத்தியதையடுத்து மாநில அரசுகளும் எம்.பிக்களுக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்றன.
அச்சுருத்தல் நிறைந்த தலைவர்களுக்கு பாதுகாப்பை மாநில அரசுகள் குறைத்தன. அவ்வாறு பாதுகாப்பு குறைக்கப்பட்ட முக்கியஸ்தர்களில் ஒருவர் தான்பூலன்தேவி. முதலில் அவருக்கு 5க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை உத்தரப் பிரதேச அரசு வழங்கியிருந்தது. பின்னர், இதைக் குறைத்து ஒரே ஒருபாதுகாவலர் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
இது தவிர பல எம்.பிக்களுக்கு சும்மா பந்தாவுக்காக கொடுக்கப்பட்டிருந்த கருப்புப் பூனைப் படைப் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டது. அப்போதே இதற்கு பல எம்.பிக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், அரசு பணத்தைவீணடிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் கூறிவிட்டதைத் தொடர்ந்து வாயை மூடிக் கொண்டனர்,
இப்போது சக எம்.பியான பூலன்தேவி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், தங்களுக்கு உடனடியாக பாதுகாப்புவழங்க வேண்டும் என எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூலன்தேவிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகுறைக்கப்பட்டதால் தான் அவர் கொல்லப்பட்டதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்கள் எல்லோருமே ஒரு நாள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகப் போவது உறுதி, இது குறித்து அத்வானியிடம்(உள்துறை அமைச்சர்) கேட்பேன் என்கிறார் சமாஜ்வாடி கட்சியின் நம்பர் டூ தலைவரான அமர்சிங்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசக் கட்சி எம்.பிக்களும் தங்களுக்கு பாதுகாப்புவேண்டும் எனக் கோரியுள்ளனர். அக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான யெர்ரன் நாயுடு கூறுகையில்,எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வாபஸ் பெற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.