ராமதாஸ், மம்தா முறைப்படி தே.ஜ. கூட்டணியில் சேர்ப்பு
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியும் திரிணாமூல் காங்கிரஸ்கட்சியும் இன்று (திங்கள்கிழமை) முறைப்படி அக்கூட்டணியில் மீண்டும் இணைந்தன.
"காரியம் ஆகும் வரை காலைப் பிடிப்பது, காரியம் ஆன பின் கழுத்தைப் பிடிப்பது" என்ற கதையாக, தேர்தல்முடிந்த 2மாதங்களிலேயே, பாமக தலைவர் ராமதாஸ் மறுபடியும் தன் சுயரூபத்தைக் காட்டினார். அதிமுககூட்டணியிலிருந்து வெளியே வந்தது பாமக.
பின்னர், மீண்டும் தே.ஜ. கூட்டணியை நோக்கித் தன் பார்வையை பாமக திருப்பியது. பலமுறை தே.ஜ.கூட்டணியின் கதவுகளைத் தட்டியது.
டெல்லிக்கு விஜயம் செய்த ராமதாஸ், வாஜ்பாயைச் சந்தித்தாரா என்ற விஷயமே வெளியில் தெரியவில்லை.ஆனாலும், "தே.ஜ. கூட்டணியில் பாமக சேர்ந்துவிட்டது" என்ற அறிவிப்புடன்தான் ராமதாஸ் டெல்லியிலிருந்துதிரும்பினார்.
இருந்தபோதிலும், திருமாவளவன்-கிருஷ்ணசாமி ஆகியோரின் எதிர்ப்புக் குரல்களுக்கிடையில், தமிழக தே.ஜ.கூட்டணியில் இன்னும் "திரிசங்கு சொர்க்க" நிலையில்தான் பாமக இருக்கிறது.
தமிழக தே.ஜ. கூட்டணியின் தலைவரான திமுக தலைவர் கருணாநிதியும் ராமதாசும் இன்னும் சந்தித்த பாடில்லை.கருணாநிதி கைது சம்பவத்தையடுத்து, அவருடைய "ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர்" கோரிக்கை உள்பட பலகோரிக்கைகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு வருவதால், தே.ஜ. கூட்டணிக் கூட்டங்களைத் தொடர்ந்துபுறக்கணித்து வருகிறார் கருணாநிதி.
இந்நிலையில், தே.ஜ. கூட்டணியில் பாமக சேர்ந்து விட்டது என்று திங்கள்கிழமை காலை டெல்லியில் நடைபெற்றதே.ஜ. கூட்டணிக் கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.
திரிணாமூல் காங்கிரசும் தே.ஜ. கூட்டணியில் சேர்ந்தது:
தெஹல்கா டாட் காம் வெளியிட்ட ராணுவ ஆயுத பேர ஊழல் விவகாரத்தில் பாஜக சிக்கிக் கொண்டதையடுத்து,அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலக வேண்டும் என்று அப்போதையரயில்வே அமைச்சராக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி போராடினார்.
தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்த மம்தா, பின்னர் தே.ஜ. கூட்டணியிலிருந்தே விலகிவிட்டார். கடந்தமே மாதம் மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். ஆனாலும் அத்தேர்தலில் அவர் மண்ணைக் கவ்வியதுதான் மிச்சம்.
இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தே.ஜ. கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டேஇருந்தார். கடந்த மாதம் இதற்கான "கிரீன் சிக்னலும்" வாஜ்பாயிடமிருந்து கிடைத்தது. ஆனாலும் முறைப்படியாகச்சேர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
திங்கள்கிழமை காலை நடந்த தே.ஜ. கூட்டணிக் கூட்டத்தில், திரிணாமூல் காங்கிரஸ் முறைப்படி தே.ஜ. கூட்டணியில்சேர்த்துக் கொள்ளப்பட்டது.