கம்பம் அருகே வங்கி மேனேஜரிடம் ரூ.1 கோடி கொள்ளை- 3 பேர் கைது
கம்பம்:
கம்பம் அருகே காரில் பணத்துடன் சென்ற வங்கி மேனேஜரிடம் இருந்து ரூ.1 கோடி கொள்ளையடித்த கும்பலைச்சேர்ந்த 3 பேரைப் போலீசார் கைது செய்தனர். 7 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வண்டன் மேட்டைச் சேர்ந்த ஏலக்காய்வியாபாரி கிருஷ்ணசாமி, தனது ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குச் சம்பளம்வழங்குவதற்காக கம்பத்தில் உள்ள வங்கியில் தனது கணக்கிலிருந்து 1 கோடி ரூபாய் பணம் கேட்டார்.
இதையடுத்து நேற்று (சனிக்கிழமை), வங்கி மேனேஜர் சதுரகிரி 1 கோடி ரூபாய் பணத்துடன், காரில் வண்டன்மேட்டுக்குச் சென்றார். காரை அவரது டிரைவர் சுரேஷ் ஓட்டிச் சென்றார்.
பகல் 1 மணி அளவில் அந்தக் கார் கம்பம் மலைப்பகுதியான கம்பம் மெட்டு என்ற இடத்தில்சென்றுகொண்டிருக்கும் போது, நம்பர் பிளேட் இல்லாத ஜீப் அருகே நின்றுகொண்டிருந்த 7 பேர் காரைவழிமறித்தனர்.
கார் நிற்காமல் சென்றதால், காரைநோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கார் தாறுமாறாக ஓடி நின்றது.அருகில் வந்த அந்த 7 பேரும், காருக்குள் இருந்த வங்கி மேனேஜரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பணத்தைப்பறித்துக் கொண்டனர்.
மேனேஜரும், டிரைவர் சுரேசும் பணம் பறிபோன அதிர்ச்சியில் நின்றுகொண்டிருக்கும் போது, அந்த வழியாகவேகமாகச் சென்ற அம்பாசிடர் காரை வழிமறித்தனர். ஆனால் அது நிற்காமல் வேகமாகச் சென்றதால், சந்தேகப்பட்டு, அதன் நம்பரைக் குறித்துக் கொண்டு போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸ் நடத்திய தீவிர தேடுதலில், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மூட்டையில் கட்டி எடுத்துச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிமிருந்து, ரூ.93.15 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கி பறிமுதல்செய்யப்பட்டது.
கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 7 பேரின் விவரங்களைச் சேகரித்து, அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.