புதிய தமிழகம் பந்த்: விருதுநகரில் 2 பஸ்களுக்கு தீ வைப்பு
விருதுநகர்:
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைதைக் கண்டித்து தென் மாவட்டங்களில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட பந்தின்போது ஏற்பட்ட கலவரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் 2 பஸ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
சாத்தூரிலிருந்து விருதுநகருக்கு ஒரு அரசு பஸ் கிளம்பியது. சிவகாசி விலக்கு அருகே வரும்போது, அந்த பஸ்சைவழிமறித்த ஒரு கும்பல் அதன் மீது கல் வீசித் தாக்கினார்கள்.
இதையடுத்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். பின்னர் பஸ்சுக்குள் ஏறிய கும்பல்,அரிவாள்களால் வெட்டி பஸ் இருக்கைகளைச் சேதப்படுத்தியது. அதன் பிறகு பஸ்சுக்குத் தீ வைத்து விட்டு அந்தக்கும்பல் ஓடி விட்டது.
ஆனால் தீ பரவும் முன்பே சாத்தூரிலிருந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதனால் அதிகசேதமின்றி பஸ் தப்பியது.
இதேபோல் விருதுநகரிலிருந்து காரியாபட்டிக்குச் சென்று கொண்டிருந்த டவுண் பஸ், வரலொட்டி அருகே ஆறுபேர் கொண்ட கும்பலால் வழி மறிக்கப்பட்டது.
பஸ்சை விட்டு பயணிகளை வெளியேற்றிய அந்தக் கும்பல், பஸ்சுக்குத் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது.
இச்சம்பவத்தில் ஒரு இருக்கை மட்டும் எரிந்து போனது. அதற்குள் பயணிகளே தீயை அணைத்து விட்டனர். பஸ்டிரைவர் லேசான காயமடைந்தார்.
இந்த இரு சம்பவங்கள் தவிர விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பஸ்கள் மீது கல் வீச்சுச்சம்பவங்கள் நடந்தன. இதில் ஏராளமான பஸ்கள் சேதமடைந்தன.
மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications