பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பயணிகள் பஸ் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும்காயம் ஏற்படவில்லை.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்போராட்டம் நடத்தி வருகின்றனர். வத்தலகுண்டு பகுதியிலும் இதுபோன்ற வன்முறைகள் நடந்தன. இதுவரை 7 பஸ்கள் தீவைத்துக்கொளுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பழனியிலிருந்து கம்பத்திற்கு சென்ற பஸ் வத்தலகுண்டு வந்தது. அப்போது பழைய வத்தலகுண்டுவிலக்கு பகுதியில் சிலர் பஸ்ஸை வழிமறித்தனர். டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், ஒரு கும்பல் பஸ் மீது பெட்ரோல் குண்டை வீசியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் நிரப்பி திரி கொளுத்தப்பட்டிருந்த பாட்டில் பஸ் மீது விழாமல் தரையில் விழுந்து வெடித்துச்சிதறியது. இதையடுத்து அக்கும்பல் பஸ்சுக்குள் இருந்தவர்களை மிரட்டி கீழே இறங்கச் சொன்னது. அப்போது சிறிது தூரத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பெட்ரோல் குண்டு விழுந்தசப்தம் கேட்டு விரைந்து வந்தனர்.
இதைப் பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீஸார் விரட்டிச் சென்று 8 பேரைப் பிடித்தனர். பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியசெயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.