அரசு ஊழியர்களை குறைக்க முடிவு: சலுகைகள் ரத்து
சென்னை:
தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல சலுகைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் குறைக்கப்படும். இதற்காக விருப்பஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.) அமலாக்கப்படும். இது வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
அரசு அலுவலகங்கள், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்களின்ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
அரசு பதவிகளுக்கு ஆள் எடுப்பு ரத்து:
இனி அரசுப் பணிகளுக்கு புதிதாக ஆள் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், பிற துறைகளிலிருந்து ஆட்களைபயன்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதை கைவிடவும் அரசு முடிவுசெய்துள்ளது.
போலீஸ், ஆசிரியர்கள், மருத்துவர்கள், நர்ஸ்களை வேலைக்குச் சேர்ப்பதும் ரத்து செய்யப்படுகிறது.
ஊழியர்கள் தங்களது ஈட்டிய விடுப்பை (எர்ன்ட் லீவ்) பணமாக்கிக் கொள்ள தற்போது வசதி உள்ளது. ஆனால், இனி அடுத்த ஓராண்டுக்குஇந்த விடுப்பை பணமாக மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல பி.எப்பிலிருந்து (பொது வைப்பு நிதி) 6 மாதத்துக்கு ஒரு முறை பணம் எடுக்க இப்போது அனுமதி உள்ளது. இது இனிமேல் 1ஆண்டுக்கு ஒரு முறை தான் முடியும்.
அரசு அதிகாரிகளின் விமான, ரயில் பயணப்படி மற்றும் மருத்துவப் படியிலிருந்து 10 சதவீதம்வெட்டப்படவுள்ளது. மிக மூத்த அதிகாரிகள் மட்டுமே விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அடுத்ததாக புதிதாக ஏற்படுத்தப்படும் பதவிகளையும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தனியாரிடம் அரசுப் பணிகள் ஒப்படைப்பு:
அரசு வாகனங்களை ஓட்டுவது, அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு ஆகிய பொறுப்புகள் தனியாரிடம் வழங்கஅரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் உள்ள கூடுதல் ஊழியர்கள் பிற துறைகளில் பணியில்ஈடுபடுத்தப்படுவர்.
இந்தத் திட்டங்கள் மூலம் நிறைய பணம் மிச்சமாகும் என்று அரசு நம்புகிறது.