இந்தியா நடத்திய தாக்குதலில் 22 பாகிஸ்தான் வீரர்கள் பலி
ஜம்மூ:
பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலை எதிர்த்து இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் 22 பாகிஸ்தான்வீரர்கள் பலியாயினர்.
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உயரமான மலைப் பகுதிகள்உள்ளன. இங்கு தரைப் பகுதியில் தான் இந்திய ராணுவம் இயங்க வேண்டியுள்ளது.
மலைகளில் இருந்து இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிகளால் சுடுவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது.சமீபத்தில் இப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டு 3 இந்திய எல்லைப் படை வீரர்கள் இறந்தனர்.
நேற்றும் இந்தியப் படைகள் மீது பாகிஸ்தானியர்கள் சுட்டனர். எல்லையில் உள்ள கிராமத்தினரையும் பாகிஸ்தான்படைகள் விடவில்லை. கனரக துப்பாக்கிகளைக் கொண்டு அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய கிராமவாசிகள்காயமடைந்தனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் மிக பயங்கர தாக்குதலில் இந்தியா இறங்கியது. 81 எம்.எம். மார்ட்டர் ரகதுப்பாக்கிகளைக் கொண்டு பாகிஸ்தானிய படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் குவித்து வைத்திருந்த எரிபொருள் கிடங்குகளையும் குறி வைத்து இந்தியப் படைகள் தாக்கின.
இதில் 22 பாகிஸ்தான் வீரர்கள் இறந்தனர். 62 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்த எரிபொருள்கிடங்குகளில் இன்னும் தீ எரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து கூடுதல் பாகிஸ்தானிய படைகள் குவிக்கப்பட்டு ஆர்ட்டிலரி துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து நூற்றுக்கணக்கான இந்தியப் படைகளும் ஆர்ட்டிலரி தாக்குதலில் இறங்கினர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் எல்லா பக்கமும் குண்டுகள் சீறிப் பாய்ந்தவண்ணம் உள்ளன. இரவு முழுவதும்நடந்த துப்பாக்கிச் சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அப் பகுதியில் வசிக்கும் கிராமத்தினர் வீடுகளை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்துள்ளனர்.இவர்களை ராணுவம் தனது பாதுகாப்பில் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications