ஊட்டிக்கு கார் போக்குவரத்து தொடங்கியது, பஸ்களுக்கு தடை தொடர்கிறது
ஊட்டி:
ஊட்டியில் மழையினால் மலைப் பாதையில் சரிவு ஏற்பட்டதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து இன்றுமீண்டும் தொடங்கியது. ஆனால், கார், வேன் போன்ற இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகின்றன.
பஸ், லாரிகள் ஊட்டி செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரமடைந்ததால் பலத்த மழை பெய்தது. இந்தபலத்த மழைக்கு ஊட்டியும் தப்பவில்லை.
இங்கு பெய்த பலத்த மழையினால் சில தினங்களுக்கு முன் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
சில தினங்களுக்கு பிறகு சாலைப் பகுதிகளிலும் நிலச்சரிவு காரணமாக பாறைகள் உருண்டு வந்து பாதையை மூடின.மேலும் மழையில் அடித்து வரப்பட்ட மணலும் குவிந்தது. இதனால், மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலைப்போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பாறைகள் வெடி வைத்துத்தகர்க்கப்பட்டன. மணல் புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து கார், வேன், ஜீப் போன்ற இலகு ரக வாகனங்கள் செல்லஅனுமதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலையை தயார்படுத்த இன்னும் சில நாட்கள்ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.