சேலம் சிறையில் 4 கைதிகள் ஒரு வாரமாக உண்ணாவிரதம்
சேலம்:
சேலம் மத்திய சிறையில் 4 கைதிகள் தொடர்ந்து 7 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் மூக்கன், கணேசன், முருகன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் ஒரு வழக்கு தொடர்பாக ரத்தினவேல் பாண்டியன் என்பவரும் அதே சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு இவர்கள் நான்கு பேரும் சிறைக்குள் ஜாதி கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக எழுந்த புகாரையடுத்து,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
டிசம்பர் 31ம் தேதி, இவர்கள் தங்களை மீண்டும் பாளையங்கோட்டைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதத்தைதொடங்கினர். சிறைத்துறை அதிகாரிகள் அந்த கைதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் போலீசின் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இதனால் அவர்கள் மீது சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உண்ணாவிரதத்தின் ஆறாவது நாளான கடந்த சனிக்கிழமை அவர்கள் உடல் நிலை மோசமானது. அதனால் சிறைஅதிகாரிகள் மருத்துவ சிகிச்சையை அவர்களை மேற்கொள்ளும்படி பேசிப் பார்த்தனர்.
ஆனால் அவர்கள் அதற்கு உடன்படாமல், சிகிச்சை அளித்தால் தாங்களே காயப்படுத்திக் கொள்வோம் என்றுகூறிவிட்டனர்.
சாப்பிட்டு 7 நாட்கள் ஆகிவிட்டதால் இவர்களில் மூக்கன், பாண்டியன் இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)மயங்கி விழுந்தனர். இதனால் அவர்கள் இருவரும் சேலம் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கூட்டிச்செல்லப்பட்டனர்.
நான்கு கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.