வாய்ப்புக் கொடுத்தால் தமிழகத்தை கம்ப்யூட்டர் மயமாக்குவேன்: வாசன்
சென்னை:
தமிழக மக்கள் தமாகாவுக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழக அரசு நிர்வாகம் முழுவதையும் கம்ப்யூட்டர்மயமாக்குவோம் என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.
தமாகாவின் அறிவியல் தொழில் நுட்பப் பிரிவு சார்பில் அதன் தலைவர் நாராயணன் தலைமையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சென்னையை அடுத்த போரூரில், தமாகா வெப்சைட்டில் விவசாயிகளுக்கான விற்பனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.
வயல்வெளியில் நடந்த விழாவில் வாசன் பேசியதாவது:
இதுவரை எந்த கட்சியிலும் இல்லாத வகையில் தமாகாவில் தான் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவு என்றுதுவக்கப்பட்டு உள்ளது. அதன் சார்பில் மழை நீர் சேமிப்புத் திட்டம் போன்ற மக்களுக்கு இன்றியமையாத மிகச்சிறந்த திட்டங்களை செய்து வருகிறோம்.
இதன் அடுத்த கட்டமாக விவசாயிகளின் நலன்களுக்காக வெப்சைட்டில் இந்த பிரிவு துவக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு இந்த பிரிவு உதவும்.
மூப்பனார் இருந்த போது கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல செயல் திட்டங்களை வடிவமைத்துக்கொடுத்தார். அதில் கரும்பில் இருந்து எத்தனால் என்ற எரிபொருளை தயாரிக்கலாம் என்று தெரிவித்தார். அவரதுஆலோசனையை அரசு ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, இனிமேலாவது அந்த திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும். அதன் மூலம் மூப்பனாரின்கனவு நனவாகும். தமாகாவுக்கு மக்கள் வாய்ப்பு தந்தால் அரசு இயந்திரம் முழுவதையும் கம்ப்யூட்டர்மயமாக்க்ப்படும் என்று வாசன் கூறினார்.