சாய்பாபாவிடம் ஆசி பெறவே வந்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்
பெங்களூர்:
சாய்பாபாவின் கவனத்தைக் கவர்ந்து அவரிடம் ஆசி பெறுவதற்காகவே வந்ததாக துப்பாக்கியுடன் "பிருந்தாவன்ஆசிரம"த்துக்கு வந்து கைது செய்யப்பட்ட சோமசுந்தரம் கூறினான்.
சாய்பாபாவின் "பிருந்தாவன் ஆசிரம"த்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த சோமசுந்தரத்தை சேவா தளத்தொண்டர்களும் போலீசாரும் வளைத்துப் பிடித்து விட்டனர்.
அவனிடம் நடத்திய தீவிர விசாரணையின்போது வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:
தருமபுரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சோமசுந்தரம் லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் உடையவன். சாய்பாபாவின்ஆசி கிடைத்தால் பரிசு விழுந்து பெரும் பணக்காரன் ஆகிவிடலாம் என்று அவன் கருதினான்.
இதையடுத்து சாய்பாபாவுக்கு சோமசுந்தரம் பலமுறை கடிதம் எழுதியுள்ளான். புட்டபர்த்திக்கும் பலமுறைசென்றபோதிலும் அவனால் சாய்பாபாவைச் சந்தித்து ஆசிபெற முடியவில்லை.
இதையடுத்து ஆசிரமத்துக்கு வரும் ஏதாவது ஒரு பக்தரை துப்பாக்கி முனையில் கடத்தி சாய்பாபாவிடம் ஆசிவாங்கிவிடலாம் என்று அவன் கருதியுள்ளான்.
ஒரு சிறிய கைத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அவன் புட்டபர்த்தி சென்றுள்ளான். ஆனால் அவர் பெங்களூர்சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும், சோமசுந்தரம் இங்கு வந்தான்.
ஒயிட்பீல்டில் உள்ள "பிருந்தாவன் ஆசிரம"த்தில் ஏதாவது ஒரு பக்தரைத் துப்பாக்கி முனையில் கடத்தி,சாய்பாபாவின் கவனத்தைக் கவர்ந்து அவரிடமிருந்து ஆசி பெறலாம் என்று எண்ணியிருந்தான்.
ஆனால் அதற்குள் அவனை நாங்கள் பிடித்து விட்டோம் என்று போலீசார் கூறினர்.
சோமசுந்தரம் நன்றாகத் தெலுங்கு பேசுகிறான் என்றும் அவனுக்கு தெலுங்கு எழுத, படிக்கவும் தெரியும் என்றும்போலீசார் கூறினர்.
அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக 2தனிப் போலீஸ் படைகள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.