அழகிரி பிறந்த நாளில் தேர்தல் நிதியளித்த திமுகவினர்
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் பிறந்த நாளின்போது, ஆண்டிப்பட்டி தேர்தலுக்காக திமுகபிரமுகர்களும் தொண்டர்களும் தாராளமாக நிதியளித்தனர்.
தனது 51-வது பிறந்த நாளை மதுரையில் நேற்று (புதன்கிழமை) வெகு விமரிசையாகக் கொண்டாடினார் அழகிரி.
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள அழகிரியின் வீட்டில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை அழகிரி கொண்டாடினார்.நிகழ்ச்சியின்போது அழகிரியின் மனைவி காந்தி மற்றும் குழந்தைகள் உடனிருந்தனர்.
திமுக மேலிடத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி கலந்து கொண்டார். மற்றும் முன்னாள் அமைச்சர்கள்பொன்.முத்துராமலிங்கம், பெரியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அழகிரியை வாழ்த்தினர்.
பிறந்த நாளுக்கு வரும் தொண்டர்கள், பிரமுகர்கள் ஆண்டிப்பட்டி தேர்தல் நிதிக்கு அன்பளிப்பு வழங்குமாறுஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் நிதி உண்டியலில் பலரும்தாராளமாக பணம் போட்டனர்.
அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரை நகரெங்கும் வரவேற்பு வளைவுகள், கட் அவுட்கள் மூலம்அசத்தியிருந்தனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.