இந்தியா மீண்டும் ஆகாஷ் ஏவுகணை சோதனை
பாலசோர்:
விமானங்களைத் தாக்கும் ஆகாஷ் ரக நவீன ஏவுகணையை இந்தியா இன்று சோதனையிட்டது.
ஒரிஸ்ஸாவில் உள்ள சண்டிபூர் ஏவுகணை ஆராய்ச்சித் தளத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
இந்த ஏவுகணை சோதனை முழு வெற்றியடைந்துள்ளதாகத் தெரிகிறது. வானத்தில் 25 கி.மீ. தூரம் சென்று எதிரிநாட்டு விமானத்தை விரட்டி அழிக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. இன்று மாலை 5.25 மணிக்கு நடமாடும்லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் பல விமானங்களைத் தாக்கும் திறன் படைத்தது இந்த ஏவுகணை. இந்தியாவின் பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவு டாக்டர் அப்துல் கலாமின் தலைமையில் தயாரித்த ஏவுகணை இது.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையுடன் இந்த ஏவுகணையை மேற்கத்திய நாடுகள் ஒப்பிட்டுள்ளன.ராஜேந்திரா ரக ரேடார் உதவியுடன் ஒரே நேரத்தில் 64 விமானங்களை அடையாளம் கண்டு தாக்கக் கூடியது இந்தஏவுகணை லாஞ்சர்.
ஒரு ஏவுகணை 650 கிலோ எடையுள்ளது.