பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் பலமுக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்று காலை சட்டசபை கூடியதும் சபாநாயகர் காளிமுத்து திருக்குறளைக் கூறி கூட்டத்தைத் தொடங்கினார்.
அதன் பின்னர் நிதி அமைச்சர் பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் சில முக்கியஅம்சங்கள்:
- ஏப்ரல் 14 முதல் மலிவு விலை மது நிறுத்தப்படும்.
- இந்தியாவில் தயாக்கப்படும் மது வகைகளை விற்பனை செய்யும் மதுக் கடைகளில் உரிம விதிமுறைகளுக்குட்பட்டு மது அருந்தும் இட வசதியை (பார்கள்) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.
- சென்னை, கோவையில் மகளிர் குற்றங்கள் குறித்து விசாரிக்க மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
- சென்னையில் பன்னாட்டு தரத்துடன், தனியாருடன் இணைந்து அதிநவீன வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனை அமைக்கப்படும்.
- பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அடுத்த நிதியாண்டிற்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் விதத்தில் அடையாளச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதியோர் நலக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். அதன் கீழ் முதியோர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கும் வகையில் சுகாதார கார்ட் (ஹெல்த் கார்ட்) திட்டம் அமல்படுத்தப்படும்.
- கன்னியாகுமரி, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஊனமுற்றோர் நலத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- கிராமச் சந்தைகளை (முந்தைய உழவர் சந்தைகள்) மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- விவசாய மேம்பாடு தொடர்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 3 ஆண்டு கால பயிற்சித் திட்டம் அறிமுகம்.
- விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதத்தில் 1,000 ஊரகத் தொழில்கள் துவக்கப்படும்.
- மாவட்டங்களில் உள்ள தொழில் மையங்கள் மேம்படுத்தப்பட்டு மாற்றியமைக்கப்படும்.
- இந்தியாவிலேயே முதல் முறையாக, சிறு தொழில் முனைவோர்கள், இன்டர்நெட் மூலம் தற்காலிகச் சான்றிதழ் பெற வசதி செய்யப்படும்.
- தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக 31,000 வீடுகள் கட்டித் தரப்படும்.
- மாநிலம் முழுவதிலும் வீட்டு வசதி வாரியத்தால் கட்டித் தரப்பட்டுள்ள 15,000 வீடுகள் நிலை உயர்த்தப்படும்.
- சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியில் வீடுகள் கட்டப்படும்.
- சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீட்டு வசதி வாரிய வீடுகள் ரூ.25 கோடி செலவில் நிலை உயர்த்தப்படும்.
- கிராம மகளிர் நலனுக்காக ஒருங்கிணைந்த துப்புறவு வளாகம் ரூ.183 கோடியில் கட்டப்படும்.
- நகர்ப்புற துப்புறவு மேம்பாட்டுப் பணிகளில் தனியார் பங்கேற்புக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும்.
- 500 பேருக்கு மேல் வசிக்கும் பகுதிகளில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சாலைகள் அமைக்கப்படும்.
- சென்னை திருமயிலை முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் திட்டத்தை புனித தாமஸ் மலை (பரங்கி மலை) வரை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.
- தமிழக போக்குவரத்துக் கழகங்களில் அதிகரித்து வரும் பழைய பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் ரூ.227.5 கோடி செலவில் 2,275 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
- அரிசி, கோதுமை விற்பனைக்கு 2 சதவீத வரி விதிப்பு.
- ரேஷன் அரிசி, கோதுமையின் விலை உயர்வில் மாற்றம் இல்லை.
- வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் கொப்பரைத் தேங்காய் விற்பனைக்கு 1சதவீதத்திலிருந்து 2 சதவீத வரி விதிப்பு.
- சித்தா, யுனானி மருந்துப் பொருட்களுக்கு 4 சதவீத வரி விதிப்பு.
- சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, அச்சிடப்பட்ட கைக்குட்டை ஆகியவற்றுக்கு 4 சதவீத வரி விதிப்பு. ஜிம்னாசியக் கருவிகள், உபகரணங்களுக்கு 12 சதவீத வரி விதிப்பு.
- மூங்கில், வணிக வரி முத்திரையிடப்படாத மிட்டாய்கள், கேக், ஐஸ்கிரீம், துணி, தகரத்தால் ஆன பொருட்கள் ஆகியவற்றிற்கு உள்ள வரி விகிதம் 4 சதவீதமாக குறைப்பு.
- தேயிலை, காபி, ரப்பர் போன்ற தோட்டப் பயிர்களின் வரி விதிப்பு முறையில் மாற்றம் இல்லை. மின்சார மற்றும் மின்னணு பாகங்களுக்கு 10 சதவீத வரி விதிப்பு.
- பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா தலைமையில் வசீரமைப்பு ஆலோசனை ஆணையம்.
- புதிய வரி விதிப்புகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.690 கோடி கூடுதலாக கிடைக்கும். பட்ஜெட் பற்றாக்குறையாக ரூ. 640 கோடி இருக்கும்.












Click it and Unblock the Notifications