கோவில்களில் மீண்டும் ஒரு கால பூஜைத் திட்டம்
சென்னை:
அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் திமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட ஒரு காலபூஜைத் திட்டம் மீண்டும் அமலாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
போதிய நிதி வசதியில்லாமல் பூஜைகள் நடத்தப்படாமல் இருந்து வரும் கோவில்களில் அரசின் நிதியுதவிடன் ஒரு நாளில் ஒருமுறையாவது பூஜை நடத்த இந்தத் திட்டம் அமலாக்கப்பட்டது. ஆனால், இதை திமுக அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், கோவில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் தற்போது அது நடைபெறவில்லை. இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்று கேட்டார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பதிலளிக்கையில், 1991ம் ஆண்டு முதல் 96 வரை இந்தத் திட்டம் செம்மையாகசெயல்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு கோவிலுக்கும் அரசு முதலீடு செய்திருந்த ரூ. 25,000 என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இத்திட்டத்தை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். சுமார்1000 கோவில்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கோவிலின் பெயரிலும் ரூ. 25,000 முதலீடு செய்யப்பட்டு இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications