தமிழகத்தில் கர்நாடக அரசு பஸ் ஜப்தி
சென்னை:
விபத்தில் இறந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக கண்டக்டரின் குடும்பத்தினருக்கு, கோர்ட் உத்தரவின்படி நஷ்டஈடு வழங்கத் தவறியகர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 2 பஸ்களை ஜப்தி செய்ய சென்னை கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி ஒரு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராகப் பணியாற்றி வந்தவர் ராஜு. கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திரமாநிலம் சித்தூர் அருகே ராஜு பணியில் இருந்த அரசு பஸ் மீது, கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதியது.இதில் ராஜு உயிரிழந்தார்.
ராஜுவின் மனைவி இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில் தனது குடும்பத்துக்கு கர்நாடக அரசுப் போக்குவரத்துக்கழகம் ரூ. 12 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம், ராஜு குடும்பத்தினருக்கு ரூ. 5.95 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு கர்நாடக அரசுப்போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது. கோர்ட் கெடு விதித்திருந்த 2 மாதத்திற்கு மேலாகியும் கூட நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் கர்நாடக போக்குவரத்துக் கழகம் அலட்சியமாக இருந்து வந்தது.
இதையடுத்து சென்னை கோர்ட்டை மீண்டும் அணுகினார் ராஜுவின் மனைவி. இதை விசாரித்த நீதிமன்றம் கர்நாடக அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் 2 பஸ்களை ஜப்தி செய்ய கடந்த 8ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி கோர்ட் அதிகாரிகள் நேற்று சென்னை பாரி முனை மத்திய பஸ் நிலையத்துக்குச் சென்றனர். அங்கே பெங்களூர் செல்வதற்காகநின்று கொண்டிருந்த ஒரு பஸ்ஸை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.
விரைவில் இன்னொரு பஸ்சும் ஜப்தி செய்யப்படும் என்று தெரிகிறது.