உங்க கடமை உணர்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா !
மதுரை:
ஆண்டிப்பட்டி செல்வதற்காக முதல்வர் ஜெயலலிதா மதுரை வழியே ஹெலிகாப்டரில் பறந்து சென்றார்.
ஆனால், அவர் வானில் பறந்து சென்றபோதும் கூட சாலையில் போக்குவரத்தை நிறுத்தி அம்மாவுக்கு ஓவர்விசுவாசம் காட்டினர் மதுரை போலீசார்.
நேற்று ஆண்டிபட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரை வந்தார் ஜெயலலிதா.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்தே ஹெலிகாப்டர் மூலம் தேனி சென்றார். தேனியில் பள்ளிமைதானத்தில் இறங்கியது அந்த ஹெலிகாப்டர். இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் ஆண்டிபட்டிக்குச் சென்றார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இதே பாணியிலேயே சென்னைக்கு திரும்பினார்.
ஜெயலலிதாவின் வருதையை ஒட்டி மதுரையில் கடந்த இரு தினங்களாக இரவு முதல் போலீஸார் லாட்ஜ்கள்,செக்போஸ்ட்களில் விடிய விடிய சோதனை நடத்தினர்.
எல்லா வாகனங்களையும் சோதனை செய்து தான் மதுரைக்குள்ளேயே அனுமதித்தனர்.
நேற்று காலை 7 மணி முதலே விமான நிலையம் முதல் சர்க்யூட் ஹவுஸ் வரையிலும், கோரிப்பாளையம் தொடங்கிசிம்மக்கல், மதுரா கோட்ஸ் பாலம், புது ஜெயில் ரோடு, காளவாசல், விராட்டிபத்து வரை சாலையின் இருபக்கங்களிலும் ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
காலை 11 மணி முதல் 2 வரை தான் இந்த போலீஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும்போலீஸார் சாலையில் நிறுத்தப்பட்டனர். ஜெயலலிதாவின் விமானம் 4 மணிக்கு சென்னை புறப்பட்டவுடன் தான்போலீசார் கலைந்து சென்றனர்.
இத்தனைக்கும் ஜெயலலிதா மதுரை நகருக்குள்ளேய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா வானத்தில் பறந்தாலும், அவருக்கு ரோட்டிலேயே பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
லவ்லி படத்தில் விவேக் சொல்வது மாதிரி உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று தான்போலீசாரைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது.