குஜராத் முதல்வரை மாற்ற வேண்டும்: ஜெ. வலியுறுத்தல்
சென்னை:
குஜராத் சட்டசபையைக் கலைத்து விட்டு அங்கு தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக, அம்மாநில முதல்வரானநரேந்திர மோடியை மாற்றி விடலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) யோசனைகூறினார்.
குஜராத்தில் வன்முறைகள் ஓயாததால் அந்த முதல்வரை மாற்றுவது தான் நல்லது என்றார்.
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
குஜராத்தில் தற்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அதற்குப் பதிலாக அங்கு தற்போது பதவியிலிருக்கும் மோடி தலைமையிலான அமைச்சரவையைக் கலைத்து விட்டுவேறு யாராவது ஒருவரை முதல்வராக்கலாம். ஆனாலும் அது பாஜக மற்றும் மத்திய அரசின் கைகளில்தான்உள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், தேசநலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என்றார் ஜெயலலிதா.
மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று மத்திய அரசின் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியும்பிடிவாதமாக இருக்கிறதே, இதனால் மத்திய அரசு கவிழுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ""இப்போதைக்குஇதுபற்றி நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்"" என்று ஜெயலலிதாபதிலளித்தார்.
குவைத் பெண் விவகாரம்:
இதற்கிடையே இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள குவைத் நாட்டுப் பெண்ணான தலால் ஆஸ்மியை மீண்டும்அவருடைய சொந்த நாட்டுக்கே அனுப்புவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும்ஜெயலலிதா கூறினார்.
இது குறித்து இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
மனிதாபிமான முறையில் ஆஸ்மியை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு என்னுடைய சிறிய பணி முடிவடைந்துவிட்டது.
அவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தோ, இந்தியக் குடியுரிமை அளிப்பது குறித்தோ மத்திய அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். மத்திய அரசுதான் அவரைக் காப்பாற்ற வேண்டும்.
தற்போது ஆஸ்மியைத் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று குவைத் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே மத்திய அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
மாறன்-சோனியா சந்திப்பு விவகாரம்:
இதற்கிடையே மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர்சந்திப்பு குறித்து இரு தரப்பிலும் மறுப்பு எதுவும் வெளியிடப்படவில்லையே என்று ஜெயலலிதாவிடம் நிருபர்கள்கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, ""எனக்குக் கிடைத்த தகவலைத்தான் நான் சட்டசபையில் தெரிவித்தேன்"" என்றுகூறினார்.












Click it and Unblock the Notifications