பெங்களூர்-குமரி ரயிலில் கொள்ளை
பெங்களூர்:
பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.1 லட்சம் நகை மற்றும் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
பெங்களூரிலிருந்து தினமும் இரவு 9 மணிக்குக் கிளம்பும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவும்வழக்கம்போலவே கிளம்பியது.
சுமார் 10 மணிக்கு பெலந்தூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெட்டியில் அமர்ந்திருந்த 8 பேர் திடீரென்று எழுந்து, பயணிகளிடம் கத்தியைக்காட்டி மிரட்டினர்.
பின்னர் பெண்களிடம் இருந்து நகைகளையும், ஆண்களை மிரட்டி பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்தனர்.
சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த பின் அவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தப்பிஓடிவிட்டனர்.
கொள்ளையடித்துக் கொண்டிருந்தபோதே பயணிகள் போட்ட கூச்சலைக் கேட்டு அங்கு வந்த போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சி செய்யவில்லைஎன்று புகார் கூறப்பட்டது. துப்பாக்கி இல்லாததால்தான் தங்களால் தீவிரமாகச் செயல்படவில்லை என்று அந்தப் போலீசார் கூறினர்.
பயணிகளிடம் சேகரிக்கப்பட்ட அடையாளங்களைக் கொண்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.