பெர்னாண்டஸ்புருடா விடுகிறார் என்கிறது அதிமுக
சென்னை:
குஜராத் முதல்வர் விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸை நான் தனியே சந்தித்து எந்தத் கருத்தையும்தெரிவிக்கவில்லை என்று நாடாளுமன்ற மக்களவை அதிமுக தலைவர் பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தனது மாநிலத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் அதை மறைமுகமாகத் தூண்டிவிட்டு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்கவேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் மோடியை மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர்ஜெயலலிதாவும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், சமீபத்தில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறுகையில், ஜெயலலிதா வெளியில் தான் இப்படிபேசியுள்ளார். அக் கட்சியின் எம்.பிக்கள் குழுத் தலைவரான பி.எச். பாண்டியன் என்னைத் தனியே சந்தித்து இந்த விவகாரத்தில்அதிமுகவின் உண்மையான நிலையை என்னிடம் விளக்கிவிட்டார் என்று கூறியிருந்தார்.
இதை தற்போது பாண்டியன் மறுத்துள்ளார்.
இது குறித்து பி.எச்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நரேந்திர மோடி விவகாரம் தொடர்பாக அதிமுகவின் நிலையை புரட்சித்தலைவி அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந் நிலையில் நான் ஏன் தனியாக ஜார்ஜை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னைப்பற்றிக்கூறியிருப்பது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. அவர் ஏன் இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டார் என்று தெரியவில்லை.
முன்பு இப்படித்தான், சந்திரபாபு நாயுடுவை சங்கடப்படுத்த வேண்டும் என்பதற்காக மக்களவை தெலுங்கு தேச தலைவர் தன்னிடம் சிலகருத்துக்களை தனியாக சந்தித்துக் கூறினார் என்று செய்தியைப் பரப்பினார். ஆனால் அதில் அவர் தோல்வியுற்றார்.
அதுபோலவே இப்போதும் அவர் தோல்வியுறுவார் என்று கூறியுள்ளார் பாண்டியன்.