ஊட்டியில் பனிக்கட்டியுடன் கொட்டிய மழை
ஊட்டி:
ஊட்டியில் நேற்று இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த மழை பெய்தது.
ஊட்டியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கி விட்டது. சமவெளிப் பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பம்காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இங்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது.இந்த மழை சுமார் 5.30 மணி வரை நீடித்தது.
இடையிடையே பனிக்கட்டி மழையும் பெய்தது. இந்தத் தொடர் பலத்த மழையினால், ஆங்காங்கே குவிந்திருந்தசுற்றுலாப் பயணிகள் ஒதுங்க இடமில்லாமல் பெரிதும் சிரமப்பட்டனர்.
சேரிங் கிராஸ், பஸ் நிலையம், மார்க்கெட், பிங்கர் போஸ்ட் ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.படகு சவாரி நிறுத்தப்பட்டது. பலத்த மழை காரணமாக, மாலை நேரங்களில் அதிகமாக தென்படும் சுற்றுலாபயணிகள், நேற்று குறைந்த அளவிலேயே காணப்பட்டனர்.
நேற்று பெய்த பலத்த மழை காரணமாக, ஊட்டியில் வெப்பம் தணிந்து குளிர் அடிக்க ஆரம்பித்துள்ளது. பயிர்கள்வெள்ளத்தில் மூழ்கிய போதிலும், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்றுதெரிகிறது.