இலங்கை கடற்படையிடம் 40 புலிகள் கைதாகி விடுதலை
திரிகோணமலை:
திரிகோணமலை அருகே படகுகளில் சென்று கொண்டிருந்த 40 கடற்புலிகளை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் புலிகளின் 3 படகுகளையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
உடனடியாக மூன்று படகுகளையும் சுற்றி வளைத்த கடற்படையினர், அவற்றிலிருந்த 40 கடற்புலிகளைக் கைதுசெய்தனர். இவர்களில் புலிகளின் மூத்த கமாண்டர்களான கருணா மற்றும் பதுமன் ஆகியோரும் அடங்குவர் என்று"வீரகேசரி" பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஸ்கான்டிநேவியன்கண்காணிப்புக் குழுவினர் உடனடியாகத் தலையிட்டு, கடற்புலிகளை விடுவிக்க ஏற்பாடு செய்தனர்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடற்புலிகள் இவ்வாறு படகுகளில் சென்றதாகக் கடற்படை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதுகுறித்து கண்காணிப்புக் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படவில்லை என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சரான திலக்மாரப்பனே நம்பிக்கை தெரிவித்தார்.