பிரபாகரன் விவகாரம்: ரணிலை சந்திப்பேன் - ஜெ.
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இங்கு வரும்இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயிடம் கோருவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
இலங்கை இனப் பிரச்சனைக்கு நார்வே தூதுக் குழுவினர் மூலம் நடக்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
ஆனால் இவ்விஷயத்தில் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க பிரபாகரன் மட்டும்தான் உள்ளாரா என்ன? தனக்குத்தானாகவே தலைவர் பட்டம் சூட்டிக் கொண்டவர்தான் அவர். யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல.
ரணில் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அப்போது நான் அவரைச் சந்திக்க நேர்ந்தால், பிரபாகரனைஇந்தியாவிடம் ஒப்படைக்கும்படி நிச்சயம் அவரிடம் வலியுறுத்துவேன்.
புலிகள் மீதான தடை நீக்கப்படாது என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். அடுத்தமாதத்துடன் முடிவடையவிருக்கும் இந்தத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசுதொடர்ந்து வலியுறுத்தும் என்றார் ஜெயலலிதா.