திருடர்களைப் பிடிக்க சென்னையில் அதி விரைவுப் படை
சென்னை:
சென்னையில் திருடர்கள் மற்றும் கடத்தல்காரர்களைப் பிடிக்க சிறப்பு அதி விரைவுப் படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் திருடர்கள் அட்டகாசம் தலைவித்தாடுகிறது. எப்போது, திருடர்கள் வருவார்களோ என்ற பீதியில் சென்னைமக்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர். வீட்டை பூட்டி விட்டு வெளியே பால் வாங்கக் கூட போக முடியாத நிலை உள்ளது.
அரை மணி நேரம் வீடு பூட்டியிருந்தாலே உடைத்துக் கொள்ளையடித்துவிடுகிறார்கள்.
இந் நிலையில் திருடர்களைப் பிடிக்க சென்னை காவல்துறை புதிய படை ஒன்றை அமைத்துள்ளது. இந்த அதி விரைவுப் படைக்குசென்னைப் புறநகரில் ஒரு இடத்தில் வைத்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய படையின் துவக்க விழா சென்னையில் மாநகர ஆணையர் விஜயக்குமார் முன்னிலையில் நடந்தது. அப்போது, அதிவிரைவுப் படையினர் பல்வேறு சாகசச் செயல்களை செய்து காட்டினர்.
திருடர்களைப் பிடிப்பது எப்படி, வீட்டுக்குள் மறைந்திருக்கும் திருடர்களை பிடிப்பது, குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்திவைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களை மீட்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை பிடிக்கும் முறை பற்றிஅதி விரைவுப் படையினர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
இந்தப் புதிய படை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விஜயக்குமார் பேசுகையில், இது திருடர்களை மட்டும் பிடிப்பதற்காகஅமைக்கப்பட்டதல்ல. சென்னை போன்ற மாநகரங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கு இதுபோன்ற படை தேவை.
சென்னையில் கமிஷனர் அலுவலகம், தென், மத்திய மற்றும் வட சென்னைப் பகுதிகளில் இந்த அதி விரைவுப் படை நிலைகொண்டிருக்கும். தேவைப்படும் நேரத்தில் மின்னல் வேகத்தில் சென்று இவர்கள் நடவடிக்கையில் இறங்குவர்.
இந்தப் படையில் பெண்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். படைக் காவலர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்காவலர்களாக இருப்பார்கள். கிட்டத்தட்ட கமாண்டோ படையினர் போலவே இவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதுஎன்றார் அவர்.