சென்னையில் கள்ள 5 ரூபாய் நாணயம் தயாரித்த 2 பலே ஆசாமிகள் கைது
சென்னை:
சென்னையில் கள்ள 5 ரூபாய் நாணயம் தயாரித்த 2 பேரைப் போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை-ஆவடியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நாணயம் தயாரிக்கப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து போலீசார் அந்த வீட்டை நோட்டமிட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இன்று காலை அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்த போலீசார், கள்ள நாணயம் தயாரித்துக்கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட அந்த இருவருமே கடலூரைச் சேர்ந்த காமராஜ் மற்றும் ஜோதி என்பது விசாரணையின்போது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களாக அந்த வீட்டில் தங்கியிருந்து தாங்கள் கள்ள நாணயங்களைத் தயாரித்துவருவதாக அவர்கள் இருவரும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டனர்.
சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கள்ள 5 ரூபாய் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ள நாணயம்தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உலோக அச்சுக்கள் மற்றும் கெமிக்கல் கலவை போன்றவற்றையும்போலீசார் கைப்பற்றினர்.
இந்தப் பொருட்களைக் கொண்டு எவ்வாறு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன என்பதையும் கைதான இருவரும்போலீசார் மற்றும் பத்திரிக்கை நிருபர்களிடம் விளக்கிக் காண்பித்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கள்ள நாணயங்கள் தயாரிப்பது தொடர்பாக மேலும் சிலரைத்தேடுவதற்காக தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துணை கமிஷனர் சைலேந்திர பாபுகூறினார்.
மும்பையிலும் புனேயிலும் இதுபோன்ற கள்ள 5 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்பட்டு, புழக்கத்தில்விடப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட அந்த இரண்டு பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.