இந்தியாவில்தான் இருப்பேன்: தலால் ஆஸ்மி
சென்னை:
தான் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்புவதாக குவைத் நாட்டுப் பெண்ணான தலால் ஆஸ்மிஇன்று நிருபர்களிடம் கூறினார்.
ஆந்திராவைச் சேர்ந்த தன்னுடைய காதலனான காதர் பாட்சாவுடன் குவைத் நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட்மூலம் இந்தியா வந்தார் ஆஸ்மி. அவரை சென்னை விமான நிலையப் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஆஸ்மிக்கு ஆதரவாக அரசியல்வாதியிலிருந்து திரையுலகினர் வரை குரல் கொடுக்கவே, தமிழக முதல்வர்தலையிட்டு ஆஸ்மியை ஜாமீனில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து ஆந்திராவுக்குச் சென்ற ஆஸ்மி, காதர் பாட்சாவைத் திருமணம் செய்து கொண்டு, பாட்சாவின்வீட்டிலேயே குடித்தனம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே ஆஸ்மி விவகாரம் குறித்து முதலில் கண்டு கொள்ளாத குவைத் அரசு, பின்னர் அவரைகுவைத்துக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
ஆனால் இந்திய அரசிடமிருந்து இதுகுறித்து எந்த பதிலும் இதுவரை வந்த மாதிரித் தெரியவில்லை.
இந்நிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று காலை நேரில் ஆஜராகிய ஆஸ்மி, அந்நீதிமன்ற உத்தரவுப்படிஅங்கு கையெழுத்திட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நெருக்கடியான சூழ்நிலையில் எனக்கு உதவிய தமிழக மக்களுக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
காதர் பாட்சாவைத் திருமணம் செய்து கொண்டு நான் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன்.
இந்தியாவிலேயே தொடர்ந்து இருப்பதுதான் எனக்குப் பிடித்துள்ளது. நான் இங்கேயேதான் இருப்பேன்.
இந்தியக் குடியுரிமையை எனக்கு அளிக்கும்படி உரிய அதிகாரிகளை நான் நேரில் சந்தித்துக் கேட்பேன் என்றார்ஆஸ்மி.