பிறந்தநாளை ரத்து செய்தார் கருணாநிதி
சென்னை:
சைதாப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தலின்போது வரலாறு காணாத அளவுக்கு அதிமுகவினர் போட்ட கள்ளஓட்டுக்கள் மற்றும் அவர்கள் செய்த முறைகேடுகளைக் கண்டித்து வரும் 3ம் தேதி தனது 79வது பிறந்த நாளைகொண்டாடப் போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:சைதாப்பேட்டையில் நடத்திய அக்கிரமங்கள் மூலம் ஜனநாயகத்தின் குரல் வளையையே முறித்து விட்டார்கள்அதிமுக ஆட்சியாளர்கள்.
தமிழக வரலாற்றில் எத்தனையோ பொதுத் தேர்தல்களும் இடைத் தேர்தல்களும் நடந்துள்ளன. அப்போதெல்லாம்அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மோதல் சம்பவங்கள் நடந்ததுண்டு.
ஆனால் அவற்றுக்கெல்லாம் நேர்மாறாக ஜனநாயக முறைப்படியே தேர்தலை நடத்தப் போவதில்லை என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலின் போதும் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலின் போது தன்னுடையசர்வாதிகாரத்தைப் பயன்படுத்திய ஜெயலலிதா, இந்த இடைத் தேர்தலிலும் அதை மீண்டும் அபாயகரமாகத் தூண்டிவிட்டுள்ளார்.
குறிப்பாக சைதாப்பேட்டை தொகுதியில் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ரவுடிகளும் இணைந்து நின்றுஆடியுள்ள வெறியாட்டம் ஜனநாயகத்துக்கே விடப்பட்ட அறைகூவலாகும்.
மிகவும் நேர்மையானவர்கள் என்று நான் கருதியிருந்த போலீஸ் அதிகாரிகள் வரிந்து கட்டிக் கொண்டு அதிமுகவஸ்தாதுக்களுடன் சேர்ந்து வன்முறைக்குத் துணை நின்றனர் என்பது நான் மிகவும் எதிர்பாராத ஒன்று.
கிட்டத்தட்ட 70 சதவீத வாக்குச் சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதைக் கண்டும் காணாமல் போலீசார்இருந்துள்ளனர் என்பது வேதனை மிக்கது.
இவ்வாறு ஜனநாயகப் படுகொலை நடந்த இந்த தினத்தை கருப்பு தினமாக நான் கருதுகிறேன். இந்த நாளில் துக்கம்அனுசரிக்க வேண்டும்.
எனவே பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். வரும் 3ம் தேதிஎன்னைச் சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம்.
என் பிறந்த நாளை முன்னிட்டு 1ம் தேதி (இன்று) முதல் திமுகவின் பல்வேறு அணிகளும் நடத்தத் திட்டமிட்டிருந்தநிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் வரும் 2ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ள புத்தக வெளியீட்டு விழா மட்டும் திட்டமிட்டபடிநடக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை என்று கருணாநிதி அறிவித்திருப்பது திமுகவினரிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications