டி.சியை வயர்லெஸ்சில் திட்டிய ஏ.சி. சஸ்பெண்ட்
மதுரை:
போலீஸ் துணை கமிஷனரின் உத்தரவுகளை மதிக்காததோடு, வயர்லஸ்ஸில் அவரை அவதூறாக பேசிய உதவி போலீஸ் கமிஷனர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரையில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருப்பவர் அபின் மோதக் திணேஷ். குற்றப்பிரிவில் உதவி கமிஷனராக இருப்பவர் குப்புசாமி. மே 20ம் தேதி இருவரும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் இருவரும் வேறு வேறு பகுதிகளில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது குப்புசாமியை வயர்லஸ்ஸில்கூப்பிட்ட அபின் மோதக் திணேஷ் அவரை உடனடியாக தேவர் சிலை அருகே வருமாறு பணித்தார்.
ஆனால் துணை கமிஷனரின் உத்தரவைக் கண்டு கொள்ளாத குப்புசாமி, சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்தப் பகுதிக்கு வந்துள்ளார்.ஆனால் துணை கமிஷனரின் ஜீப்பை தாண்டி வேகமாக சென்றார்.
இதைப் பார்த்து அதிர்ந்த அபின் மோதக் திணேஷ், குப்புசாமியை வயர்லஸ்ஸில் அழைத்து உடனடியாக தன்னுடைய இடத்துக்கு வருமாறுபணித்தார். ஆனால் அதை நிராகரித்த குப்புசாமி, திணேஷை தாறுமாறாக திட்டத் தொடங்கினார். மதுரை நகர போலீஸார் அனைவரும்தங்கள் வயர்லஸ்களில் இந்த கெட்ட வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தனர்.
மதுரை நகர கமிஷனர் சூர்ய பிரசாத்துக்கும் இந்தத் தகவல் போனது. மறுநாள் குப்புசாமியை அழைத்த அவர் அபின் மோதக்கிடம் மன்னிப்புகேட்க உத்தரவிட்டார். குப்புசாமியும் மன்னிப்பு கேட்டார்.
மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டார் கமிஷ்னர். விசாரணை அறிக்கை மாநில உள்துறை செயலாளர் நரேஷ்குப்தாவிடம் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மற்றும் தலைமைச் செயாளருடன் விவாதித்த நரேஷ் குப்தா, குப்புசாமியைசஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.