தமிழக அகதிகள் முகாம்களில் இலங்கை அமைச்சர்
சென்னை:
இலங்கை இனப் பிரச்சனைக்கான அமைதிப் பேச்சு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் விடுதலைப்புலிகளின்மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும் என்று அந்நாட்டு அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத்ஜெயவர்த்தனே கூறினார்.
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களைப் பார்வையிடுவதற்காக வந்துள்ள ஜெயவர்த்தனேஇன்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
ஜெயவர்த்தனேவுடன் இலங்கை தூதரக அதிகாரிகளும் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர்இதுகுறித்து ஜெயவர்த்தனே நிருபர்களிடம் கூறியதாவது:
இங்குள்ள அகதிகள் முகாமிலுள்ள தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்வது குறித்துஜெயலலிதாவுடன் பேசினேன்.
இதற்கான அனைத்து வகையான ஆவணங்களும் வெகு வேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று சென்னையில் உள்ள சில அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டேன். அங்குள்ள தமிழ் அகதிகள் மீண்டும்இலங்கை திரும்புவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த அகதிகள் வசித்து வந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இன்னும்லட்சக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை எல்லாம் எடுத்து அழித்த பிறகேதமிழ் அகதிகளை இங்கிருந்து அழைத்துச் செல்வோம்.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன. இலங்கையிலிருந்து இங்குவந்துள்ள தமிழ் அகதிகள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகின்றனர். இதற்காக நான் தமிழகத்திற்கும்ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சிற்சில சிரமங்கள் இருந்த போதிலும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளும்தடையில்லாமல் நடந்து வருகின்றன.
இலங்கை அரசுக்கு இனியும் போர் மீது நம்பிக்கை இல்லை. எனவே இந்தப் பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றிபெறும்.
தாய்லாந்தில் நடக்கவிருக்கும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் புலிகளின்மீதான தடையை இலங்கை அரசு விலக்கிக் கொள்ளும் என்றார் ஜெயவர்த்தனே.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வருவது பற்றி ஜெயலலிதாவிடம்கேட்டீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
அகதிகள் முகாம்களில் அமைச்சர்:முன்னதாக நேற்று சென்னையில் உள்ள புழல் மற்றும் வாலாஜாபேட்டை ஆகிய இடங்களில் உள்ள அகதிகள்முகாம்களை ஜெயவர்த்தனே பார்வையிட்டார்.
அப்போது இலங்கை அகதிகளிடம் பேசிய அவர், அவர்களை மீண்டும் நாட்டுக்கே திரும்பி வருமாறு அழைப்புவிடுத்தார்.
அகதிகள் முறையீடு:ஆனால் இலங்கையில் 1980க்கு முன்பிருந்த நிலையே இருக்கும் என்று உறுதி அளித்தால் தான் நாங்கள்திரும்புவோம். நாங்கள் அங்கு வந்து குண்டுச் சத்தங்களுக்கு நடுவே வாழ விரும்பவில்லை என்று அவர்கள்கூறினாலும் தாய் நாடு திரும்ப தங்களுக்கு முழுச் சம்மதம் என்றும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 111 இலங்கை தமிழ் அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் மட்டும் சுமார் 66,000அகதிகள் உள்ளனர்.
தமிழகத்தில் 9 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜெயவர்த்தனே மேலும் சில அகதிகள் முகாம்களைப்பார்வையிட்ட பின்னர் இலங்கை திரும்பவுள்ளார்.
இலங்கை அமைச்சர் ஒருவர் அகதிகள் முகாம்களை வந்து நேரில் பார்வையிடுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.