அராஜகத்தைக் கட்டவிழ்த்துள்ளார் ஜெ.: அமெரிக்காவிலிருந்து வைகோ அறிக்கை
சென்னை:
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து எதிர்க் கட்சிகளைப் பழிவாங்குவதற்காக அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது தமிழகஅரசு வழக்கு தொடர்ந்தது. இவர்களில் வைகோவைத் தவிர மற்ற 8 பேரையும் இன்று காலை போலீசார் கைதுசெய்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வைகோ சிகாக்கோ நகரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக ஜெயலலிதா வழக்கம் போல் தன்னுடைய அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார். இதற்காகத் தற்போது பொடா சட்டத்தை ஏவி விட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் பொடா சட்டத்தின் கீழ் இன்று 8 மதிமுக பிரமுகர்களைத்தமிழக அரசு கைது செய்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆனாலும் மதிமுக இவற்றையெல்லாம் கண்டு அஞ்சி விடாது. அதற்காக நாங்கள் வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.
இந்தக் கைதுச் சம்பவங்களைக் கண்டு மதிமுக தொண்டர்களும் கலங்கி விடக் கூடாது. வன்முறைக்கு இடம்கொடுத்து விடாமல் அனைவரும் அமைதியாகவும் கட்டுக் கோப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை மறுநாள் (ஜூலை 11) பிற்பகல் நான் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துசேர்வேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சென்னையில் மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை மறுநாள் சென்னை திரும்பும் வைகோவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க மதிமுகதொண்டர்கள் திரண்டு வர வேண்டும்.
வைகோ சென்னை திரும்பியவுடன் அவரைக் கைது செய்யவும் தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டால் மறுநாளே தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டஅலுவலகங்களின் முன் மதிமுகவினர் போராட்டம் நடத்துவார்கள் என்று கூறியுள்ளார் கணேசன்.












Click it and Unblock the Notifications