ஈழத் தமிழர்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்: சிறையிலிருந்து வைகோ அறிக்கை
மதுரை:
ஈழத் தமிழர்களுக்காக சிறை சென்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இன்று அதிகாலையில் சிறிது நேரம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ தனது வழக்கறிஞர் ஆசைத்தம்பி மூலம் அவர்வெளியிட்ட அறிக்கை விவரம்:
பொடா சட்டத்தை அரசியல் பழி வாங்கலுக்காக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்தச் சட்டத்தையே அவரக்தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும் ஈழத் தமிழர்களுக்காக சிறை சென்றதில் பெருமை அடைகிறேன்.
வரும் 15ம் தேதி நடக்கும் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்.
எனது கட்சியினர் அமைதியான முறையில் இந்த கைதை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள் என்று அதில் வைகோ கூறியுள்ளார்.
மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரமில்லை:
வைகோவின் வழக்கறிஞர் ஆசைத்தம்பி நிருபர்களிடம் கூறுகையில், பொடா சட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதமே தவறு. இந்தச்சட்டத்தின்படி ஒரு சிறப்பு நீதிமன்றம் தான் கைது வாராண்டை பிறப்பிக்க முடியும். வழக்கமான நீதிமன்ற மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறக்கஅதிகாரமே இல்லை.
அதே போல இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக எஸ்.பி. அளவிலான மூத்த போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். ஆனால்,வைகோ விஷயத்தில் இள நிலை அதிகாரி தான் பொடா வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளார் என்றார்.
ஸ்பெஷல் ரூம் தேவையில்லை...
சிறையில் உங்களுக்கு சிறப்பு வசதிகள் கொண்ட அறை வேண்டுமா என்று மாஜிஸ்திரேட் கேட்டபோது, தனக்கு அந்த அறை வேண்டாம்என வைகோ கூறிவிட்டார்.
ஒரு எம்.பி என்ற முறையில், நாட்டுக்கு வருமான வரி செலுத்தும் குடிமகன் என்ற வகையில் எந்த சிறையை ஒதுக்குவீர்களோ அதைத்தரலாம் என்றார்.
ஆனாலும், வைகோவை சிறப்பு அறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.