அதிகாரிகள் மூலம் வெட்டி விளக்கம் தருவதா? மத்திய அரசு மீது ஜெ. மீண்டும் பாய்ச்சல்
சென்னை:
தவறையும் செய்துவிட்டு அதைச் சுட்டிக் காட்டினால் அதிகாரிகள் மூலமாக வெட்டித்தனமான விளக்கம் தருவதா என மத்திய அரசைத்தாக்கி மீண்டும் காட்டமான அறிக்கை விட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
டாக்டர் கலாம் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காததைக் கண்டித்து நேற்று ஜெயலலிதா அறிக்கை விட்டார். இதையடுத்து மத்தியஅரசு உள்துறை அமைச்சக அதிகாரிகள் மூலமாக விளக்கம் தந்தது.
ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமானால் அது குறித்து எழுத்துப் பூர்வமாக கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.அதைச் செய்ய ஜெயலலிதா தவறிவிட்டார். அதனால் தான் அவரை விழாவுக்கு அழைக்கவில்லை என மத்திய அரசு அதிகாரிகள்கூறியிருந்தனர்.
மத்திய அரசின் இந்த விளக்கத்துக்கு ஜெயலலிதா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டாவது நாளாக அவர்வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரம்:
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி இருக்கிறது மத்திய அரசின் விளக்கம். ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மாநிலமுதல்வர்களை அழைக்காமல் இருந்தது மத்திய அரசின் தரப்பில் செய்யப்பட்ட மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இந்தத் தவறைச் சுட்டிக் காட்டினால் திருந்த வேண்டும். அதைவிட்டுவிட்டு இன்னும் அரதப் பழசான முறைகளைப் பின்பற்றிக் கொண்டு,அவற்றையே காரணமாகவும் காட்டிக் கொண்டு முதல்வர்களை அழைக்கவில்லை என்று வெட்டி விளக்கம் தந்திருப்பதை ஏற்க முடியாது.
மத்திய அரசு தனது செயலால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களை அசிங்கப்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தில் மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களும் மத்திய அரசும் சமமானவர்கள் தான். ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டிய கடைமை இருவருக்கும் உண்டு. முதல்வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவதை அதிகாரிகளின் அதிகார வரம்புக்குள்விட்டுவிட்டு மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதை ஏற்க முடியாது.
இது போன்ற விழாக்களில் முதல்வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது மத்திய அரசின் கடமை.
மாநில முதல்வர்கள் கேட்டால் தான் அழைப்பிதழ் அனுப்புவார்களாம். ஆனால், அம்பானிகளுக்கு மட்டும் எப்படி அழைப்பிதழ் போனதுஎன்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் என்ன அரசியல் சட்டத்தில் முதல்வர்களைவிடவும் மிக முக்கிய இடத்தில் இருப்பவர்களா? என்றுகேட்டுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications