பழ. நெடுமாறனும் "பொடா"வில் கைது: கடலூர் சிறையில் அடைப்பு
சென்னை:
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று இரவு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உடனே அவர் "பொடா" நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த மாதம் 11ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். வைகோ தவிர வேறு 8 மதிமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே புலிகளை ஆதரித்துப் பேசி வரும் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி நேற்று இரவு நெடுமாறன் கைது செய்யப்பட்டார். இரவு 9.50 மணிக்கு சென்னை-மயிலாப்பூரில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்ற கியூ பிராஞ்ச் போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள்.
அவருடைய வீட்டிலிருந்து புலிகளுக்கு ஆதரவான வீடியோ கேசட்டுகள், ஆடியோ கேசட்டுகள் உள்ளிட்ட பல ஆதாரங்களைப் போலீசார் கைப்பற்றினர்.
அதன் பிறகு பொடா சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 13ம் தேதி புலிகளுக்கு ஆதரவாக அவர் மாநாடு நடத்தினார் என்றும் தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாக அவர் பேசி வருகிறார் என்றும் கியூ பிராஞ்ச் போலீசார் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நெடுமாறன் நேராக வேப்பேரி போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் பொடாவிற்காக அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தின் நீதிபதி ராஜேந்திரன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் முன் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதியின் வீடு புரசைவாக்கத்தில் உள்ளது.
விசாரணை நடத்திய நீதிபதி ராஜேந்திரன் பின்னர் நெடுமாறனை வரும் ஆகஸ்டு 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை மத்திய சிறையில் நள்ளிரவு 11.15 மணிக்கு அடைக்கப்பட்டார்.
ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நெடுமாறன் கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications