சுதந்தர தினத்தன்று டெல்லியை தாக்க தீவிரவாதிகள் பயங்கரத் திட்டம்
டெல்லி:
வரும் 15ம் தேதி சுதந்திர தின விழாவின் போது டெல்லியில் பயங்கரத் தாக்குதல்களை நடத்துவதற்காகத் தீவிரவாதிகள் தற்போதே உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட டெல்லியின் பல சுற்றுப் பகுதிகளில் பதுங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து டெல்லி போலீசார் வழக்கத்திற்கு அதிகமான டென்ஷனுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லிக்குள் புகுந்து தாக்க முயற்சித்தால் எளிதாகப் பிடிபட்டு விடுவோம் என்று கருதும் தீவிரவாதிகள் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முகாமிட்டு தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி வருவதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் டெல்லிக்கு அருகிலேயே தங்கள் முகாம்களை அமைத்துக் கொண்டால் தான் தாக்குதலை நடத்தி விட்டு எளிதாகத் தப்பித்து விடலாம் என்றும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக மீரட், சஹரான்பூர், மொராதாபாத் மற்றும் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவ்விடங்களை உளவுத்துறையினர் சுற்றி வளைத்து தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகள் தான் இப்பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் சிலரின் உதவியுடன் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதைத் தவிர காஷ்மீரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி இளைஞர்களைத் தீவிரவாத அமைப்புகளில் சேரச் செய்வதற்கான முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதையும் உளவுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்
.இதற்காக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல இளைஞர்களைக் கவர்ந்து இழுத்து காஷ்மீரில் தீவிரமான பயிற்சிகளை பயங்கரவாத இயக்கங்கள் அளித்து வருகின்றன.
தினம் ஒரு அரசியல்வாதி...
இதற்கிடையே காஷ்மீர் தேர்தலைச் சீர்குலைப்பதற்காகவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர்.
அங்கு தினமும் குறைந்தது ஒரு அரசியல்வாதியையாவது தாக்கிக் கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் படைகளை அனுப்பி தேர்தலை வெற்றிகரமாக நடத்துவோம் என்று ஏற்கனவே துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.