கைதை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்ல நெடுமாறன் முடிவு
கடலூர்:
பொடா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
கடலூர் சிறையில் அவரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன் நிருபர்களிடம் நெடுமாறன் கூறியதாகத் தெரிவித்ததாவது:
உலகத் தமிழர் பேரவையை சமீபத்தில் தொடங்கினோம். இதன் பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பினேன். அந்த ஓய்வைக் கொடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசியாவில் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கிளம்புவதாக இருந்தேன். ஆனால் வியாழக்கிழமை இரவே அவசரம் அவசரமாகப் போலீசார் என்னைக் கைது செய்துவிட்டனர்.
அமெரிக்காவிலிருந்து விமானத்தில் வந்து சென்னையில் இறங்கியதும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். என்னையோ விமானத்தில் ஏறும் முன்பாக போலீசார் கைது செய்தனர்.
பொடா சட்டத்தை ஆதரித்து வருவதால் அதை எதிர்த்து வைகோ சட்ட ரீதியாக நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
ஆனால் நாங்களோ ஆரம்பத்திலிருந்தே பொடா சட்டத்தை எதிர்த்து வருகிறோம். எனவே பொடா சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்தது தவறு என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாங்கள் எடுக்கும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் வைகோவுக்கும் உதவும் வகையில் இருக்கும் என்று நெடுமாறன் கூறியதாக சுகுமாரன் தெரிவித்தார்.
இதற்கிடையே பொடா சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் நாளை (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கு தொடரப்படவுள்ளது.