வறட்சிக்காக மத்திய அரசிடம் ரூ.720 கோடி கேட்கிறது தமிழக அரசு
சென்னை:
வறட்சி நிவாரணத் தொகையாக தமிழகத்திற்கு ரூ.720 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு தமிழகத்தில் 16 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த ஆண்டோ 19 மாவட்டங்களில் மழையே பெய்யாமல் வறட்சி கோரத் தாண்டவம் ஆடுகிறது.
தமிழகத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏரிகள் மற்றும் குளங்கள் வற்றிப் போய் விட்டன.
இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 7.55 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்படும். இதனால் ரூ.1,332 கோடி மதிப்பிற்கு உற்பத்தி இழப்பு ஏற்படும்.
எனவே தமிழகத்திற்கு ரூ.720 கோடியை உடனடியாக வறட்சி நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications