பாளையங்கோட்டையில் ஈவ் டீசிங்: ஆசிரியை தற்கொலை - ஆசிரியர் கைது
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டை அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் ஆசிரியையை ஈவ் டீசிங் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆசிரியை சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்திராணி என்பவர் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.
இதே பள்ளியில் சங்கர் என்ற ஆசிரியரும பணிபுரிந்து வருகிறார். இவர் இந்திராணியை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் பலமுறை இந்திராணி புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய புகார்களைப் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
இதனால் வெறுத்துப் போன இந்திராணி கடந்த செவ்வாய்க்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தற்கொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வந்த போலீசார் சங்கரைக் கைது செய்தனர்.