ஆடிக் கார்த்திகை: இந்துக்களுக்கு மாலை அணிவித்து முஸ்லீம்கள் வாழ்த்து
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே இந்துக்கள் கொண்டாடிய ஆடிக் கார்த்திகை திருவிழாவின்போது முஸ்லீம் சமுதாயத்தினர் காவடி எடுத்துச் சென்ற இந்து பக்தர்களுக்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்து காவல்துறையினரை ஆச்சரியப்படுத்தினர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது பேரணாம்பட்டு. இங்கு முஸ்லீம் மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அடிக்கடி மதக் கலவரம் ஏற்படும் பகுதிகளில் பேரணாம்பட்டும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த நிலையில் சமீபத்தில் இங்கு ஆடிக் கார்த்திகை விழா நடந்தது. இதையடுத்து முருக பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்.
அதேபோலவே பேரணாம்பட்டு அருகே உள்ள சந்திரகிரி மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
பேரணாம்பட்டு வழியாகத்தான் இந்த ஊர்வலம் போக வேண்டும். ஆனால் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதி வழியாக காவடி ஊர்வலம் போனால் பிரச்சினை எழலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் போலீஸாருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படும் வகையில், காவடி ஊர்வலம் தங்களது பகுதி வழியாக சென்றபோது, பேரணாம்பட்டு முஸ்லீம் மக்கள், காவடி எடுத்து வந்தவர்களுக்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தனர்.
இதைப் பார்த்த போலீஸார் ஆச்சரியமடைந்தனர். அப்பாடா, நமக்கு வேலையில்லாமல் போய் விட்டதே என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications